Tamilnadu

தாய்க்கு விஷம் கொடுத்து, தற்கொலை செய்துகொண்ட மகன்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்.. பின்னணி என்ன ?

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் செல்லப்பா நகரை சேர்ந்தவர் வேதாசலம் - சம்பூர்ணம் தம்பதியினர். இவர்களுக்கு உதயகுமார் (50), நந்தகுமார் (47) என்ற 2 மகன்கள் இருக்கும் நிலையில், வேதாசலம் வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதையடுத்து மூத்த மகன் உதயகுமாருக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து உதயகுமார் தனது மனைவி, குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் தற்போது 70 வயதாகும் சம்பூரணம், தனது இன்னொரு மகன் நந்தகுமாருடன் வாழ்ந்து வந்துள்ளார். இப்படி இவர்கள் இருவர் மட்டும் தனியே வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தாய் சம்பூரணத்துக்கு உடல்நிலை சரியிலல்லாமல் போனது.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவருக்கு கேன்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. தாயை மகன் நந்தகுமார் மட்டும் ஒற்றை ஆளாக இருந்து கவனித்து கொண்டு வந்துள்ளார். இருப்பினும் நாளுக்கு நாள் அந்த கேன்சர் நோயானது அவரது உயிரை பறித்துக்கொண்டு இருந்துள்ளது.

இதனால் தாய் அவதிப்படுவதை காண முடியாத காரணத்தால் தாய் மற்றும் மகன், இருவரும் தற்கொலை செய்ய எண்ணியுள்ளனர். அதன்படி நேற்று இரவு சம்பூரணம் மற்றும் மகன் நந்தகுமார் விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது நந்தகுமார் தரையிலும், தாய் சம்பூரணம் கட்டிலிலும் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதையடுத்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள், சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கேன்சர் நோயால் அவதிப்பட்ட வந்த தாயை, கவனித்துக்கொள்ள முடியாததால் தாயை கொலை செய்து, மகனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வீடியோ வெளியிட்ட கோபி மற்றும் சுதாகர்.. Parithabangal சேனலுக்கு தடையா?