Tamilnadu

திரை பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் : தலைமறைவாக இருந்த ஹரிஷை கைது செய்தது தனிப்படை !

சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி விருது வழங்கும் விழாவை நடத்தியது.

அதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும், இசை அமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேல், ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சர்வதேச ஊழல் மற்றும் மனித ஆணையம் என்ற அமைப்பு நடத்தியது.

இதில் சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கியதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக்கழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையை உருவாக்கியது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

அதன்படி நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கிய நிலையில், அவர் தலைமறைவானதால், காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால், தலைமறைவாக இருந்த ஹரிஷ், விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இதனால் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராஜு ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், படிக்க இயலாதவர்களுக்கு கல்வி வழங்குவது, மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கல்வியில் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், இதேபோன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி நடந்த நிகழ்ச்சிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் மனுவில் தெரிவித்து உள்ளார்.தன் மீது தவறாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், மார்ச் 1ஆம் தேதி தன்னை கைது செய்யும் நோக்கத்துடன் விசாரணை நடத்தியதாக தெரிவித்துள்ளார். காவல்துறை நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக கூறி, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பாக விசாரணை வந்தபோது காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி, அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதி அளித்த புகாரிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரிய ராஜு ஹரிஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தற்போது தலையாமறைவாக இருந்த ஹரிஷை தனிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆம்பூரில் ஹரிஷ் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹரிஷ் பிடிபட்டார். தொடர்ந்து அவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி மர்ம கொலை.. தீவிர விசாரணையில் போலிஸ் - பின்னணி?