Tamilnadu
தேர்தலில் போட்டியிட்ட 77 பேர்.. டெபாசிட் இழந்த 75 வேட்பாளர்கள்: ஒத்த ஓட்டு வாங்கிய சுயேச்சைகள்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
286 முதன்மை அலுவலர்கள், 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 62 அலுவலர்கள் என மொத்தம் 1,206 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இடைத்தேர்தலில் 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் தொடர்ந்து தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 91,066 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் 35,532 வாக்குகள் பெற்று கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி உறுதியாகியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உட்பட 77 பேர் போட்டியிட்டனர். இதில் 29 வேட்பாளர்கள் கட்சி சார்பிலும், 48 பேர் சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். இதில் 73 வேட்பாளர்கள் நோட்டைவை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர்.
மேலும் 5 மணி நிலவரப்படி தே.மு.தி.க 949 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 6347 வாக்குகளும் பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்சிகளை தவிர மற்ற 70 வேட்பாளர்கள் 100க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். அதில் குணசேகரன், ராஜேந்திரன் என்ற இரண்டு சுயேச்சை வேட்பாளர் 1 வாக்கு மட்டுமே பெற்றுள்ளார். இப்படிப் பல வேட்பாளர்கள் ஒற்றைபடை எண்களிலும், இரட்டைப்படை எண்களிலுமே வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரஸ், அ.தி.மு.கவைத் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
Also Read
-
ரூ.62.5 கோடியில் UPSC தேர்வுப் பயிற்சி மையக் கட்டடம், செயலி... அறிமுகப்படுத்துகிறார் முதலமைச்சர்!
-
“எங்களை விமர்சனம் செய்தவர்களுக்கான பதில்தான் இது!” : ‘செயலாக்க’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“திராவிட மாடல் ஆட்சியில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
2 சூப்பர் ஓவர்கள்… இறுதியில் நடந்த சுவாரசியம்!: ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்த போட்டி!
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!