Tamilnadu

“வரலாற்று வெற்றியை பெற்றுள்ளோம்.. பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்” : முதலமைச்சர் பேச்சு!

ஈரோடு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பைத் தொடர்ந்து, தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில், "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நின்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு மிகப்பெரிய மகத்தான வரலாற்றில் பதிவாகக் கூடிய வகையில் ஒரு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்து இருக்க கூடிய அந்த தொகுதியின் வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நான் கூறியதைப் போல திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்கின்ற வேண்டுகோளை தொடர்ந்து விடுத்தேன். ஆகவே திராவிட மாடல் ஆட்சி இன்னமும் பெருமளவில் நடைபெற வேண்டும் என்கின்ற நோக்கில் மக்கள் இந்த மகத்தான வெற்றியை அளித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரையில் தன்னையே மறந்து ஒரு நாளாந்தர பேச்சாளரை போல் பேசிய பேச்சுக்கு மக்கள் ஈரோடு இடைத்தேர்தல் மூலமாக ஒரு நல்ல பாடத்தை வழங்கி உள்ளார்கள்.

அதேபோல் 20 மாத கால இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு பொதுமக்கள் அங்கீகாரம் தர வேண்டும். ஆக இதை இடைத்தேர்தலாக மட்டும் இல்லாமல், இந்த ஆட்சியை எடை போட்டு பார்க்கக்கூடிய தேர்தலாக பார்க்க வேண்டும் என பொதுமக்களிடம் நான் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டேன். இந்த நிலையில், இந்த ஆட்சிக்கு மிகவும் வலு சேர்க்கக் கூடிய வகையில் மேலும் ஒரு வெற்றியை தேடி தந்துள்ளார்கள்.

விரைவில் நாம் சந்திக்க இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கு இது அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஆகவே அந்த தொகுதி மக்கள் அத்தனை பேருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பிலும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்டு பணியாற்றிய நமது அமைச்சர் பெருமக்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே இடைத்தேர்தல் பொறுத்தவரையில் பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள். அதேபோல் நாடாளுமன்றத்திலும் இதைவிட ஒரு மிகப்பெரிய வெற்றி நிச்சயமாக வழங்குவார்கள்.

நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் உள்ளேன். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அந்த கோரிக்கையின் அடிப்படையில் தான் நிகழ்ச்சி நடைபெற்ற கூட்டத்திலும் நான் பேசி உள்ளேன். யார் வெற்றி பெற்று பிரதமராக வரவேண்டும் என்று எண்ணுவதைவிட யார் பிரதமராக இருக்கக் கூடாது, யார் ஆட்சி ஒன்றியத்தில் நடைபெறக் கூடாது என்பதை மட்டுமே இப்போதைக்கு கொள்கையாகக் கொண்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நானும் MLA-வாக பங்குபெறுவதில் பெருமை".. EVKS இளங்கோவன் பேட்டி!