Tamilnadu

அந்த மனசு இருக்கே.. வட இந்திய பயணி தவறவிட்ட பணம், ATM கார்டுகளை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்: குவியும் பாராடு!

கோயில் நகரம் பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்துக்கு நாள்தோறும் பல்வேறு வெளிநாட்டு மற்றும் மாநில சுற்றுலா பயணிகள்‌ ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்து காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் வாகனம் காஞ்சிபுரம் வேலூர் சாலையில் உள்ள ஒலிமுகமதுப்பேட்டை அருகே அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான யாத்ரின் நிவாஸ் அருகில் உள்ள வாகன நிறுத்தும் மையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் காஞ்சி நகர கோயில்களை சுற்றிப் பார்க்கும் வகையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அவ்வகையில், காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பயணிகள் பேருந்து மூலம் காலை காஞ்சிபுரம் வருகை புரிந்தனர். அவர்களின் ஒரு குழுவினர் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் இருந்து ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் என்பவரின் ஆட்டோ மூலம் காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் பெருமாள் கோவிலுக்கு சென்று இறங்கிவிட்டு மதியம் 12 மணியளவில் ஆட்டோவை அனுப்பிவிட்டனர்.

பிறகு ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் வழக்கம்போல் மதிய உணவிற்கு செவிலிமேட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்து உள்ளார்.அந்த சமயம் ஆட்டோவில் இருந்து இறங்கும்போது பின் இருக்கையில் பை ஒன்று இருப்பதை கண்டுபிடித்து உள்ளார்.

பையில் என்ன இருக்கும் என்று பார்க்கும்போது ஆட்டோவில் வந்த பயணியின் புகைப்படம், ஏ.டி.எம் கார்டு, பஸ் பர்மிட் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 50,000 உள்ளதை கண்டு வியந்துள்ளார்.

பிறகு பையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து இவர் நம் ஆட்டோவில் வந்த ராஜஸ்தான் பயணி தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு உடனடியாக வீட்டில் இருந்து புறப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் நேரடியாக யாத்திரி நிவாஸ் இடத்திற்கு சென்று தன் ஆட்டோவில் வந்த ராஜஸ்தான் பயனியை தேடி கண்டுபிடித்து அவர் தவறவிட்ட பை, ஏடிஎம் கார்டு, பாஸ் பர்மிட் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 50,000 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்தார்.

இதை பார்த்த ராஜஸ்தான் பயணி நான் தவறவிட்ட பணம் திரும்ப வந்துவிட்டது என்று பெரும் மகிழ்ச்சியோடு ஆட்டோ ஓட்டுனர் பூபாலனை கட்டி அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தி ஆட்டோ ஓட்டுனர் பூபாலனை பாராட்டியிருக்கின்றனர். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக உரியவரிடமே சேர்த்த ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: “ஐதராபாத் பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ABVP படுதோல்வி..” : ஆத்திரத்தில் மாணவர்கள் மீது ABVP தாக்குதல் !