Tamilnadu

செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய நபர்.. ஹீரோவாக மாறிய மாணவர் : சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் கிருஷ்ண பிரியா. இவர் சேப்பாக்கம் மின்சார ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரது அருகே வந்த இளைஞர் ஒருவர் திடீரென அவரது கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கியிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அந்த நேரம், மாநிலக் கல்லூரியில் படிக்கும் விக்னேஷ் என்ற மாணவர் ரயில் நிலையத்திற்குள் வந்துள்ளார். அப்போது அந்த இளைஞர் பதட்டத்துடன் ஓடி வருவதை அறிந்து ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை உணர்ந்த விக்னேஷ் அவரை பிடித்து விசாரித்துள்ளார்.

ஆனால், அந்த இளைஞர் அவருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் விசாரித்ததில் செல்போன் பறித்துக் கொடு தப்பிச் செல்ல முயன்றது தெரிந்தது. உடனே அந்த இளைஞரைப் பிடித்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த போலிஸார் அவரை ரயில்வே போலிஸாரிடம் ஒப்படைக்கும் படி கூறியுள்ளனர்.

பின்னர் விக்னேஷ் அந்த இளைஞரை ரயில்வே போலிஸாரிடம் ஒப்படைத்தார். பிறகு போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது சூர்யா என்ற இளைஞர் என்பதும், இவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து திறமையாகச் செயல்பட்டு செல்போன் திருடனைப் பிடித்துக் கொடுத்த விக்னேஷ்க்கு காவல் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: வெங்காயம் அறுவடைக்கு செலவோ ரூ.40 ஆயிரம்.. கிடைத்ததோ வெறும் 2 ரூபாய் காசு : ஒரு விவசாயியின் கண்ணீர் கதை!