Tamilnadu

20 மாதத்தில் 13 மகத்தான திட்டங்கள்.. கல்விக்காக திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளின் பட்டியல்!

தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு துறைகள் வளர்ச்சி கண்டு வருகிறது. அதிலும் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று, சிறப்பு கவனிப்பே நடந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கல்வித்துறையில் சமீபகாலமாக பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகள் என்றாலே ஏதோ மரத்தடியில் இயங்கும், கல்வித்தரமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்ற மாயைகள் இப்போது உடைபடத் தொடங்கியுள்ளன.

அதே போல் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலை உணவு திட்டம், மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் தமிழ்நாடு அரசு இப்போது தனி அக்கறை காட்டி வருகிறது.

அந்தவகையில் நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது என்றும் பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சாதனைகளை பட்டியலிட்டார்.

அதன்படி, இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்,

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள், மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்ம் வகுப்பறை உற்று நோக்கு செயலி மற்றும் மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி - ஆகிய திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்தி வருதைத் தெரிவித்தார்.

மேலும் இது அரசுப் பள்ளிகளுக்கும் மட்டுமல்ல, அனைத்துப் பள்ளிகளுக்குமானது. இதுபோன்ற புதிய புதிய செயல்திட்டங்களை ஆர்வத்துடன் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

Also Read: கல்வித்துறை குறித்து பொய் சொல்லிமாட்டிக்கொண்ட அண்ணாமலை.. பதிலடி கொடுத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் !