Tamilnadu

வளர்ப்பு தாயால் நரபலி அச்சம்.. பாதுகாப்பு கோரி சென்னை ஐகோர்ட்டில் மத்திய பிரதேச மாணவி மனுத்தாக்கல்!

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்த தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி மாணவி ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விவரம் வருமாறு:-

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்திரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர்.

தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலிஸில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை.

வளர்ப்புத் தாயின் நரபலியில் இருந்து தப்பித்து, தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்தேன். தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ABVP அமைப்பினரும் வலுக்கட்டாயமாக என்னை போபால் அழைத்துச் சென்று விடுவர் என்ற அச்சம் உள்ளது.

தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலிஸார் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: சாதி, மத, இன பாகுபாட்டை ஒழித்த முதல் அமெரிக்க நகரமானது சியாட்டில்.. - நிறைவேறியது சட்டமசோதா !