Tamilnadu

“தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்றவர்..” : நடிகர் மயில்சாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

1984-ம் ஆண்டு தாவனிக் கனவுகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி பலகுரல் மன்னனாக திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றினார். சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி.

தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து உச்சம் தொட்ட மயில்சாமி நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி பாத்திரங்களில் நடித்து அசத்தினார். ரஜினி, கமல் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் வரை ஏராளமான நட்சத்திரங்களுடன் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நேற்றைய தினம் கடைசியாக தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடுதிரும்பியுள்ளார். ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை பெற்றுள்ள இவருக்கு கடந்த டிசம்பரில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மயில்சாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இவரது மகன்களான அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி இருவரும் நடிகராக உள்ளனர்.

இந்நிலையில் இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல நகைச்சுவை நடிகர் திரு. மயில்சாமி அவர்கள் மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த அவர், தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர்.

'காமெடி டைம்' நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்யக்கூடியவர்.

திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும் திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நடிகர் மயில்சாமி..” : திரைத்துறையினர் இரங்கல் !