Tamilnadu

“இன்னும் மூன்றே நாள்தான்..” திருவண்ணாமலை ATMகள் கொள்ளை குறித்து IG கண்ணன் முக்கிய தகவல் !

திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்றைய முன்தினம் இரவு மர்ம கும்பல் உள்ளே நுழைந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். உள்ளே நுழைந்த அவர்கள், கேஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு ஏடிஎம்-ல் இருந்த சுமார் ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

தொடர்ந்து தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம், போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் என அடுத்தடுத்து 3 எஸ்.பி.ஐ ஏடிஎம் மற்றும் 1 இந்தியன் ஏடிஎம் என 4 ஏடிஎம்களில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைபோன பணம் சுமார் ரூ.72 லட்சம் என கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவையை ஆய்வு மேற்கொண்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்பத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் தலைமையில் மூன்று காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது ஆந்திரா, மும்பை, ஒடிசா போன்ற வெளிமாநிலங்களை தொடர்ந்து ஏடிஎம் இயந்திரத்தை கையாளக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய வட மாநில கொள்ளை கும்பல் இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட மாடல் ஏடிஎம் எந்திரத்தை மற்றும் ஏடிஎம் ஆதாரங்களை செயல் இழக்க செய்துவிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மெக்கானிக் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதோடு அவர்கள் அனைவருக்கும் ATM மையங்களை நன்கு கையாள தெரிந்திருக்கிறது. இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை நேற்றிலிருந்து தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து இதற்காக தமிழ்நாடு எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து ஏடிஎம் மையங்களில் அதிகாலை 2 - 4 மணி முதல் நடைபெற்று உள்ளது. ஒரே கும்பல் தான் இந்த கொல்லையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல சம்பவம் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட பகுதிகளிலும் கொள்ளை சம்பவம் அங்கேறி உள்ளது.

தற்போது 5.SP தலைமையில் 9 தனி படைகள் அமைக்கப்பட்டு இந்த கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட அளவில் ஐந்து டிஎஸ்பிக்கள் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள சில பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளது

அந்த 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த நபர்கள் தொழில்நுட்ப ரீதியாக விவரம் அறிந்த நபர்களே ஆவர். அவர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் இன்னும் மூன்று நாட்களில் கொள்ளையர்களை நெருங்கி விடுவோம்." என்றார்.

Also Read: இந்தியாவில் முதல் முறை.. மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு கடை திறப்பு: 30 வகை கருவாடுகள் விற்பனை!