Tamilnadu

instagram மூலம் கூறி ரூ.40 லட்சம் மோசடி: பெண்கள் உட்பட பலரிடம் கைவரிசை காட்டிய இளைஞர் - சிக்கியது எப்படி?

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 98வது தெருவை சேர்ந்தவர் சித்ரா (27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் மகேஷ் குமார் (27) என்பவர் பழக்கமாகியுள்ளார். மகேஷ் குமார் பல வங்கிகளில் கடன் பெற்று தருவதாக கூறி சித்ராவை நம்ப வைத்துள்ளார்.

இதனை நம்பி சித்ரா 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் கடன் பெற்று தராத காரணத்தினால், சித்ரா சந்தேகமடைந்து அவர் கொடுத்த பணம் மற்றும் நகைகளை கேட்டுள்ளார். மகேஷ் குமார் அதை தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் சித்ரா கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலிஸார் சித்ரா கொடுத்த ஆவணங்களை சரிபார்த்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து கேளம்பாக்கம் மெயின் ரோடு அரசு பள்ளி தெரு பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் (29) என்பவரை போலிஸார் கைது செய்தனர்.

மேலும், போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் யார் யாரெல்லாம் கடன் குறித்த தகவல்களை தேடுகிறார்களோ அவர்களை பிடித்து தான் பல வங்கிகளில் வேலை செய்து வருவதாக கூறி நம்ப வைத்து பல பேரிடம் பணத்தை வாங்கியுள்ளது தெரியவந்தது. சித்ராவை போலவே ப்ரீத்தி என்பவரிடம் 5 சவரன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார்.

இதேபோன்று தனக்குத் தெரிந்த பல பேரிடம் 40 லட்சம் ரூபாய் வரை மகேஷ் குமார் மோசடி செய்து பணம் மற்றும் நகைகளை வாங்கி உள்ளது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்த பணத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் பணத்தை இரட்டிப்பாக்கம் தொழிலில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததும் மேலும் சில லட்சங்களை தங்கத்தில் முதலீடு செய்து மகேஷ் குமார் நஷ்டம் அடைந்ததும் போலிஸார் விசாரணையில் தெரிய வந்தது.

பல பேரிடம் மோசடி செய்த மகேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்.

Also Read: இன்னோவா கார்.. CCTV-யில் பதிவான காட்சி : பெரம்பூர் நகைக்கடை கொள்ளையர்களை நெருங்கும் தனிப்படை போலிஸார்!