Tamilnadu

2 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த இன்ஜினீயர்.. சென்னை இளைஞர் செய்த மோசடி.. சிக்கியது எப்படி?!

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செம்பியன் (35). இவர் மருத்துவம் படித்து முடித்துவிட்டு தற்போது டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு (2021) முன்பு தனது மருத்துவ உரிமத்தை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முயன்றார். ஆனால் அவரால் தனது உரிமத்தை புதுப்பிக்க முடியவில்லை.

இதனால் மீண்டும் மீண்டும் தொடர் முயற்சியில் இருந்து வந்த அவர், முடியாததால் சென்னை அரும்பாக்கத்தில் இயங்கும், இந்திய மருத்துவ கவுன்சில் தமிழ்நாடு அலுவலகத்தில் விசாரித்துள்ளார். அப்போது இவருக்கு அதிர்ச்சியடையும் தகவலை அங்கிருப்பவர்கள் கூறியுள்ளார்கள்.

அதாவது, இவரது உரிமம் ஏற்கனவே புதுப்பித்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் இவரோ தான் எதுவும் செய்யவில்லை என்று கூற, உடனே விசாரித்ததில், இவரது உரிமத்தை வேறொருவர் தனது உரிமம் போல் காட்டி புதுப்பித்துள்ளது தெரியவந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த செம்பியன், இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அண்ணா நகர் சைபர் கிரைம் இணை கமிஷனர் மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மயிலாடுதுறையை சேர்ந்த அதே பெயரை கொண்ட செம்பியன் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த மோசடி சம்பவம் குறித்து அண்ணா நகர் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் செம்பியன் (36). 2019-ல் இவர் ஏரோனாட்டிகள் இன்ஜினீரிங் படித்தது முடித்துள்ளார். இருப்பினும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே இவரது ஆசை. ஆனால் அதற்கு சரியான வாய்ப்பு இல்லாததால், இன்ஜினீரிங் படைத்துள்ளார்.

இருப்பினும் மருத்துவர் ஆக வேண்டும் என்பதால் அதற்கு தேவையான சட்ட விரோத செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் இணையதளத்தில், மருத்துவ உரிமம் பெற்ற மருத்துவர்களின் பட்டியலை ஆய்வு செய்தார்.

அதில் இவரது வயது மற்றும் பெயருடன் தஞ்சாவூரை சேர்ந்த செம்பியன் என்பவர் இருந்துள்ளது தெரியவந்தது. எனவே அவரது அடையாளத்தை எடுத்து, அதில் அவரது புகைப்படம், முகவரி மாற்றி தனது விவரங்களை அதில் பதிந்து உரிமத்தை புதுப்பித்து உள்ளார். பின்னர் 2021ல் இருந்து சென்னையில் சில மருத்துவமனைகளில் மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இவருக்கு மருத்துவத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை Youtube உதவியுடன் தீர்த்தும் வந்துள்ளார்; நோயாளிகளுக்கு மருந்தும் வழங்கி வந்துள்ளார். தற்போது இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

ஒரே பெயர் கொண்டதால், நிஜ மருத்துவரின் தகவல்களை திருடி, இளைஞர் ஒருவர் போலி மருத்துவ உரிமத்தை தயார் செய்து மருத்துவம் பார்த்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நண்பன் அடையாளத்தை திருடி அரசு ஊழியராக இருந்த நபர்: 36 ஆண்டுக்குப் பின் மகனிடம் உண்மையை சொன்ன மனைவி!