Tamilnadu

OLA ஓட்டுநரை தாக்கிய ஆளுநரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம்.. வெளியான வீடியோவால் குவியும் கண்டனங்கள் !

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகராக இருப்பவர் திருஞானசம்பந்தம். இவர் நேற்றைய முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து முகலிவாக்கம் வரை செல்ல OLA கார் புக் செய்துள்ளார். அப்போது விரைந்து வந்த காரில் ஏறி அமர்ந்து பயணித்த திருஞானசம்பந்தம், தான் இறங்குவதாக புக் செய்த இடத்தையும் தாண்டி OLA கேப் ஓட்டுநரை இயக்க கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனால் கார் ஓட்டுநர் திருநாவுக்கரசர் தன்னால் காரை இயக்கமுடியாது எனவும், வேறு ஒரு காரை புக் செய்யவும் கூறியுள்ளார். இதனால் இருவருக்குடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திருஞானசம்பந்தம் அந்த OLA கேப் ஓட்டுநரை தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஓட்டுநர் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரில், “குடும்ப சூழ்நிலை காரணமாக நான் OLA கால் டாக்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை விமான நிலையம் முதல் போரூர் வரை செல்ல தனது வாகனத்தை திருஞானசம்பந்தம் என்பவர் முன்பதிவு செய்தார்.

அவர் பதிவு செய்த திட்டத்தில் காத்திருப்பு திட்டம் எதுவும் இல்லை. பயணி ஏறிவுடன் இறங்கும் இடம் வரை நேரடியாக அழைத்து சென்று விடும் திட்டத்தைதான் அவர் தேர்வு செய்திருந்தார். பிறகு காரில் பயணித்தபோது திருஞானசம்பந்தம் கிண்டி கத்திபாரா வந்த போது, ஏ.டி.எம் பக்கத்தில் 10 நிமிடம் காரை நிறுத்த சொன்னார்.

ஆனால் அவர்கேட்ட 10 நிமிடத்திற்க்கும் கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டார். பின்னர் தொடர்ந்து காரை ஐக்கியபோது, தனியார் உணவகத்தில் மேலும் ஒரு 10 நிமிடம் நிறுத்துமாறு கூறினார். எனது வேலை பலு காரணமாக அவர் கூறிய போது, தயவு செய்து அடுத்த வாகனம் பதிவு செய்யுமாறு கூறினேன்.

அப்போது பயணி திருஞானசம்பந்தம், 'உனக்கு அவ்வளவு திமிரா.. நான் யார் தெரியுமா? என் பின்புலம் என்னவென்று தெரியுமா ?' என்று என்னை மிரட்டினார். மேலும் எனது கண்ணத்திலும் ஓங்கி அடித்தார். நான் எவ்வளவு பெரிய ஆள் என்று தெரியுமா என்று கூறி பயங்கரமாக தாக்கினார். அதை செல்போனில் பதிவு செய்தபோது செல்போனையும் தட்டிவிட்டார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் நடந்துகொண்ட இந்த மோசமான செயலுக்கு பல்வேறு தரப்பினரிடமும் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. அந்த வகையில் 'Surya Born To Win' என்ற ட்விட்டர்வாசி ஒருவர் இந்த நிகழ்வு குறித்து முழு பதிவை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம், TN47 BZ4910 எண் கொண்ட OLA கேப் ஓட்டுநர் திருநாவுக்கரசு என்பவரை குடிபோதையில் தாக்கி அடாவடி செய்திருக்கிறார்.

திருஞானம் காரில் ஏரியவுடன் ATMமிற்குச் செல்வது, அவரது நண்பரை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல தடவை காரை நிறுத்த சொல்லி அதிக நேரம் எடுத்திருக்கிறார். ஆனால் ட்ரிப் திட்டப்படி அது ஒரு destination time bound travel. ஆகையால் ட்ரைவர் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்

நந்தம்பாக்கம் S4 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ​​வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருஞானசம்பந்தம் டிரைவரை குடிபோதையில் சரமாரியாக அறைந்திருக்கிறார். இந்த சம்பவத்தை ஓட்டுநர் வீடியோ பதிவு செய்துள்ளார். அதன் பிறகு டிரைவர் 100க்கு போன் செய்ததையடுத்து, போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு வந்தவுடன். திருஞானசம்பந்தம் மீது ட்ரைவர் புகார் கொடுத்து அதற்கு CSR வழங்கப்பட்டு விசாரனை நடந்து கொண்டிருக்கிறது.

மேற்கூறிய திருஞானசம்பந்தத்திற்கு எதிராகதான் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரையின்போது சட்டத்திற்கு புறம்பாக வீடியோ எடுத்ததாக திமுக MLA TRB ராஜாவால் புகார் எழுப்பபட்டு சபாநாயகர் உத்தரவின் பேரில் உரிமை மீறல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திருஞானசம்பந்தம், அந்த ஓட்டுநரை தாக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்கள் வலுத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பேச மறுப்பது ஏன்? : திருச்சி சிவா MP சரமாரி கேள்வி!