Tamilnadu

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பீப் பிரியாணி.. வெளியான அறிவிப்பு.. உணவு பிரியர்கள் கொண்டாட்டம் !

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் மூன்று உணவகங்களை நடத்தி வருகின்றனர். தயிர் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், பிரிஞ்சி சாப்பாடு, கேழ்வரகு களி போன்ற உணவுகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டாலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகள் விற்கப்படாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த உணவகங்களில் அசைவ உணவை சேர்க்க கோரி சமூக ஆர்வலர் மோகன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் இதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்த நிலையில், மோகன் தேசிய பட்டியல் இன ஆணையத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளார்.

அங்கு நடைபெற்ற விசாரணையில் மகளிர் சுயஉதவி குழுவினர் நடத்தும் உணவகத்தில் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சேர்க்க வேண்டும் என தேசிய பட்டியல் இன ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மூன்று உணவகங்களிலும் பீப் பிரியாணி சேர்க்க மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகங்களில் பீப் பிரியாணி சேர்க்கப்பட்டு அதற்கான விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு முன்னாள் சென்னை உணவு திருவிழாவில் பீர் பிரியாணி குறித்த சர்ச்சை வெளியாகி பின்னர் அங்கு பீர் பிரியாணி உணவகம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "அந்தக் காலத்து அஞ்சாவது” -புத்தக திருவிழாவுக்கு பேரனை அழைத்து வந்த 83 வயது முதியவர்.. இதுதான் தமிழ்நாடு!