Tamilnadu

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு : கால அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி: காரணம் என்ன ?

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்காக கால அவகாசம் வழங்கியதோடு பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்க மின்துறை சார்பில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வரை 1.03 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதில் ஆன்லைன் மூலம் 51 லட்சம் பேரும், சிறப்பு முகாம்கள் மூலம் 53 லட்சம் பேரும் இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் நிகழ்வில் பொதுமக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும் இதற்காக மின் அலுலகங்களிலும் முகாம்கள் அமைக்கப்ட்டுள்ளது. இருப்பினும் இன்னும் சிலர் இதனை இணைக்காமல் உள்ளனர். எனவே இதற்காக ஜனவரி 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் தேதி இன்றுடன் நிறைவடையும் நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 90.69 சதவீதம் பேர் இணைத்துள்ளனர். குடிசைகளுக்கான மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கவில்லை. அது மட்டுமல்லாமல், விவசாயத்துக்கான மின் இணைப்பு வைத்திருப்பவர்களில் சுமார் 5 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.

எனவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்காக, இன்றுடன் நிறைவடைவதாக இருந்த கால அவகாசம் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுவரை 2.42 கோடி மின் நுகர்வோர், தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பொதுமக்கள் கடைசிநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்" என்றார்.

10 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியிருப்பதால், பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்க, மேலும் 15 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read: PM மோடி மீது தாக்குதல் நடத்த சதி திட்டம்: “RSS இதே வேலையைத்தான் செய்கிறார்கள்” - பீகார் SP சொன்னது என்ன?