Tamilnadu

மின்சார ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. காதலியை அடுத்து காதலனும் உயிரிழப்பு: போலிஸ் விசாரணை!

சென்னை அடுத்த மடிப்பாக்கம் நாவலர் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன். கல்லூரி மாணவர் இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.

அதேபோல் உள்ளகரம் லேக் வியூ தெருவைச் சேர்ந்த சிம்ரன் குமாரி. இவர் மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து இளங்கோவன் மற்றும் சிம்ரன் குமாரிக்குப் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மகள் சிம்ரன் குமாரியின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். அது மட்டுமின்றி இளங்கோவனிடம் பழகக் கூடாது எனவும் கூறி எச்சரிக்கை செய்துள்ளனர். இருப்பினும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 26 ம் தேதியன்று இளங்கோவினுடைய பிறந்தநாள் என்பதால் இருவரும் மாலையில் சந்தித்துப் பேசி உள்ளனர். பின்னர் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் கிண்டியில் இருந்து பரங்கிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் மீது பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சிம்ரன் குமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளங்கோவை மீட்ட ரயில்வே போலிஸார் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கேள்வி கேட்ட கணவன் மீது ஆசிட் வீசிய மனைவி.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்!