Tamilnadu

வேலை தேடி வரும் வட மாநில பெண்களே குறி.. பாலியல் தொழில் நடத்தி வந்த கும்பலை கைது செய்த போலிஸ்!

சென்னையில் வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பலை போலிஸார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை துறைப்பாக்கம் சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வட மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் போலிஸார் அந்த விடுதிக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பாலியல் தொழில் நடத்திய திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கணேஷ், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ பிரதாப் , திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் பாபு , மொனீர் உசேன் ஆகிய நான்கு பேரைபோலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தன.

பின்னர் விடுதியில் இருந்த வட மாநில பெண்கள் உட்பட 9 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் போலிஸார் ஒப்படைத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட இருவரை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: உசேன் போல்ட் பணத்தை திருடியது யார்?.. எப்படி? .. முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!