Tamilnadu

"குழந்தை போல வளர்க்கும் நாயை எப்படி நாய் என்று சொல்லலாம்? " -உறவினர்களால் அடித்துக்கொல்லப்பட்ட விவசாயி !

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 65) . விவசாயியான இவரின் அண்டை வீட்டில் சகோதர்களான வின்சென்ட் மற்றும் டேனியல் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகின்றனர்.

இந்த நாய் தெரிவில் செல்பவர்களை விரட்டியும், சிலரை கடித்தும் உள்ளது. இதனால் நாய் குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் வின்சென்ட் மற்றும் டேனியலிடம் இது குறித்து கூறியுள்ளனர். ஆனால், அந்த புகார்களை இருவரும் தொடர்ந்து அசட்டை செய்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நாய் தொடர்ந்து குரைப்பதால் அதை கட்டிபோடுமாறு வின்சென்ட் மற்றும் டேனியலிடம் கூறியதோடு தனது பேரன்களிடம் அந்த பக்கம் செல்ல வேண்டாம், அந்த நாய் கடித்து விடும் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வின்சென்ட் மற்றும் டேனியல் ஆகியோர், தாங்கள் செல்லமாக குழந்தை போல வளர்க்கும் நாயின் பெயரை கூறி அழைக்காமல் நாய் என்று எப்படி அழைக்கலாம் என்று கூறி ராயப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து ராயப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர். இது ராயப்பன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழ அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறித்தனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து வின்சென்ட் மற்றும் டேனியேல் மற்றும் இவர்களது தாயார் நிர்மலா ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கொல்லப்பட்ட விவசாயி ராயப்பனுக்கு உறவினர்கள் என்பது தெரியவந்தது. நாயை நாய் என்று அளித்ததற்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதிர்ச்சி சம்பவம்.. ஓடும் ரயிலில் 2 வயது மகன் கண்முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்த டிக்கெட் பரிசோதகர்