Tamilnadu

“நீ Exam-க்கு படி..” - தன்னை விட்டுவிட்டு படத்திற்கு குடும்பம்.. விரக்தியில் சிறுமி எடுத்த விபரீத முடிவு!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் - சித்ரா தம்பதி. இவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். திருப்பனந்தாள் பேரூராட்சி உறுப்பினராக இருக்கும் சுரேஷின் இரண்டாவது மகள் சிவமகா என்பவர், அந்த பகுதி பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் துணிவு படத்தை காண குடும்பத்தார் எண்ணியுள்ளனர். ஆனால் சிவமகாவிற்கு தேர்வு இருப்பதால் அவரை அழைத்து செல்ல முடியாது என்று அவரை மட்டும் விட்டுவிட்டு படத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சிவமகாவை மட்டும் வீட்டில் படிக்குமாறு கூறிவிட்டு தந்தை சுரேஷ், தாய் சித்ரா, மூத்த சகோதரி அருள் பரணிக்கா ஆகியோர் துணிவு படத்தை காண சென்றுள்ளனர். சிவமகா தானும் வருவதாக பலமுறை கூறியும், பெற்றோர் அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி அனைவரும் வெளியேறிய பிறகு கதவை பூட்டிக்கொண்டு வீட்டினுள் இருந்துள்ளார். இதையடுத்து படத்தை பார்த்துவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தார், கதவை தட்டியுள்ளனர். ஆனால் சிவமகா கதவை திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த குடும்பத்தார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அவர்கள் வீட்டிலுள்ள அறை ஒன்றில் சிவமகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளர். இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே அவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிவமகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட பெற்றோர் துடிதுடித்து போய் கதறி அழுதனர்.

தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார்கோவில் காவல்துறை அதிகாரிகள், சிறுமியின் உடலை கைப்பற்றி உடற் குறைவுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “அன்னதானத்தில் மோதல்.. போலி போராட்டம் நடத்தி wine shop-ஐ சூரையாடிய மர்ம கும்பல்” : புதுச்சேரியில் பகீர் !