Tamilnadu

காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் கல்வித்திறன், ஊட்டச்சத்து அதிகரிப்பு: அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

சேலம் மாநகராட்சியில் மணக்காடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தீடீர் ஆய்வு செய்து, காலை உணவான கிச்சடி கேசரி ஆகியவற்றை சுவைத்து பார்த்தார்.

மேலும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவினை பரிமாறி அவற்றின் சுவை குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால், அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பது குறித்து சேலத்தில் ஆய்வு மேற்கொண்டேன்.

சேலம் மாநகராட்சியில் உள்ள 54 தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் 5447 மாணவ , மாணவிகள் காலை உணவு உண்டு பயன் பெற்று வருகின்றனர். காலை உணவு திட்டத்தின் மூலமாக குழந்தைகளின் கல்வித்திறன் அதிகரித்துள்ளது. பள்ளிகளுக்கு சரியான நேரத்திற்கு குழந்தைகள் வருவதால் வருகை பதிவும் அதிகரித்துள்ளது.

இதனால், குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை உருவாகி வருகிறது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. காலை உணவு திட்டம் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது. மிகவும் சரியான முறையில் செயல்பட்டு வருகிறது என்று கூறிய அவர், இத்திட்டம் 2023 -24 -ல் மேலும் விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார், அதன்படி விரிவாக்கம் செய்யப்படும்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “சாலையோரம் உணவுக்கு வழியில்லாமல் குழந்தைகள் இருப்பது தெரிய வந்தால், அவர்களை உடனடியாக மீட்டு பள்ளியில் சேர்க்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குழந்தை திருமணங்களை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிகம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வயது குறைந்தவர்கள் காதல் திருமணம் செய்வதும், பெற்றோர்கள் குறைந்த வயதில் திருமணம் செய்து வைத்தல் ஆகியவை குழந்தைகள் திருமணத்தில் வருகிறது. இவ்வாறு திருமணம் நடைபெறுவதாக புகார் வந்தவுடன் அத் திருமணங்கள் நிறுத்தப்படுகிறது.

குழந்தை திருமணம் குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணம் நடப்பதற்கு முன்பாக செல்போன் மூலம் அழைப்புகள் வருகிறது. அதன் அடிப்படையில் உடனே அத் திருமணங்களை நிறுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். வயது குறைவாக உள்ள பெண் குழந்தைகள் திருமணம் செய்வது தெரிந்தால், நீதிமன்றங்கள் மூலமாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் வயது சான்றிதழ் இல்லாமல், குறிப்பாக 18 வயது முடியாமல் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது இல்லை, பதிவும் செய்வதில்லை என உறுதி கூட கூறினார். இதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சி ஐந்திரு மாளிகை பகுதியில் உள்ள ராமநாதபுரம் தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பின்னர் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.

Also Read: “தமிழ்நாட்டின் வரலாறு தெரியுமா? - நாடு என்று சொன்னால் தனிநாடாகி விடுமா?” : ஆளுநர் RN ரவியை சாடிய முரசொலி!