Tamilnadu

லவ் டுடே பாணியில் செல்போனை மாற்றிய காதலர்கள்.. ஷாக்கான காதலி: கம்பி எண்ணும் காதலன்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். வாலிபரான இவர் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வாழப்பாடியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சியம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அரவிந்தும் அவரது காதலியும், லவ் டுடே படத்தை போன்று ஒருவருக்கொருவர் செல்போனை மாற்றிக்கொண்டு உள்ளனர். தனது காதலன் அரவிந்த் செல்போனை பார்த்துக் கொண்டிருந்த அவரது காதலிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சில காட்சிகள் செல்போனில் இருந்தன.

குறிப்பாக, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அரவிந்த் காதலிக்கும் நோக்கில் பேசி ஆசை வார்த்தை கூறி வீடியோ காலில் மாணவியை அரை நிர்வாணமாக நிற்கச் சொல்லி அதனை செல்போனில் பதிவு செய்து இருந்தது தெரியவந்தது.

இதனைக் கண்ட காதலி அதிர்ச்சி அடைந்து இது குறித்துச் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துப் பெற்றோர் மூலமாக வாழப்பாடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரினை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி காவல் துறையினர் அரவிந்தை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட காதலி தனது திருமணத்தை நிறுத்திடக் கோரி பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தைப் போன்று செல்போனை மாற்றிக் கொண்டதன் காரணமாக மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு சம்பவம் தெரிய வந்து திருமணம் நிறுத்தப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Swiggy -ல் 380 ஊழியர்கள் பணி நீக்கம்.. மன்னிப்பு கேட்ட CEO : தொடரும் Layoff!