Tamilnadu

ஓராண்டாக தலைமறைவு.. போக்சோ குற்றவாளியை மடக்கி பிடித்த போலிஸ் - சென்னை விமான நிலையத்தில் அதிரடி!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (32). இவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா போலிஸில், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்கு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து பஞ்சாப் மாநிலம் லூதியானா போலிஸார், தினேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக தேடி வந்தனர்.

ஆனால், தினேஷ்குமார் போலிஸிடம் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அதோடு அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. இதை அடுத்து லூதியானா போலிஸ் எஸ்.பி, தினேஷ் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி போடப்பட்டு இருந்தது ‌.

இந்த நிலையில், சென்னையில் இருந்து, இலங்கையின் தலைநகர் கொழும்பு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று கொழும்புக்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள், பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் பஞ்சாப் போலிஸால் தேடப்பட்டு வரும், தலைமறைவு குற்றவாளி தினேஷ் குமார், இலங்கைக்கு தப்பிச் செல்வதற்காக, இந்த விமானத்தில் பயணிக்க வந்தார். குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை பரிசோதித்த போது கம்ப்யூட்டரில், இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானா போலிஸாரால் தேடப்படும் தலைமறை குற்றவாளி என்று தெரிய வந்தது.

இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள், தினேஷ்குமார் பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரை வெளியே விடாமல் பிடித்து, குடியுரிமை அலுவலக அறை ஒன்றில் அடைத்து வைத்தனர். பஞ்சாப் மாநில போலிஸாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கிருந்து தனிப்படை போலிஸார், தினேஷ் குமாரை கைது செய்து அழைத்து செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

Also Read: மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவன்.. உடல் பாகங்களை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!