Tamilnadu

"இந்தியாவிற்கே வழிகாட்டிய முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம்": பேரவையில் சபாநாயகர் அப்பாவு பேச்சு!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர்ந்து ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இருந்ததை திருத்தி வாசித்தார். மேலும் உரையில் 65வது அம்சமாக இடம் பெற்று இருந்த "சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியின் அரசு வழங்கி வருகின்றது" என இருந்த பத்தியை ஆளுநர் வாசிக்காமல் வேண்டும் என்றே தவிர்த்தார். இதனால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும். இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்துப் படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன்" என தெரிவித்தார். இதையடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி அவைமுடியும் முன்பாகவும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே வெளியேறினார். ஆளுநரின் இந்த மரபு மீறிய செயலை கண்டித்து ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியது. கேள்வி நேரம் முடித்து பிறகு ஆளுநர் உரையின் போது நடந்தது என்ன என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கினார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு,"ஆளுநர் உரையின் போது அசாதாரணமான சூழலை உருவாக்கியது அவையோ, அரசோ இல்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிநுட்பத்தால்தான் சட்டபேரவையின் மாண்பு காக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் உள்ளது.

ஆளுநரின் உரிமை என்ன? அவர் செய்ய வேண்டிய கடமை என்ன? என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் முதலமைச்சரின் தீர்மானம் உள்ளது. முதலமைச்சரின் இந்த துணிவான நடவடிக்கையை தமிழ்நாடே பாராட்டி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: இவர்கள் ஸ்வெட்டர் அணியும் வரை நானும் ஸ்வெட்டர் அணிய மாட்டேன்: ராகுல் காந்தியின் முடிவிற்கு என்ன காரணம்?