Tamilnadu

"நாங்கள் மதத்தின் எதிரிகள் அல்ல ".. திராவிடம் என்ற சொல்லை பிடிக்காதவர்களுக்கு பாடம் எடுத்த முதலமைச்சர்!

சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2500 திருக்கோவில்களில் திருப்பணிக்கு ரூ.50 கோடி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நிதியை வழங்கினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " அனைத்து துறையும் வளர்வது தான் திராவிட மாடல் வளர்ச்சி என்று நாங்கள் சொல்லி வருகிறோம். திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். நாங்கள் மதவாதத்தின் எதிரிகளே தவிர, மதத்தின் எதிரிகள் அல்ல. என்பதை இத்தகைய விழாக்களின் மூலமாக அறியவேண்டியவர்கள் அறிய வேண்டும். அறிவார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழமையான கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன.

திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் செய்யப்படுகின்றன. தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

மனிதர்களில் மட்டுமல்ல கோயில்களிலும் நகரக் கோவில் - கிராமக் கோவில் என்றும்- பணக்காரக் கோயில் - ஏழ்மையான கோவில் என்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுகிறது. கிராமப் புறக் கோயிலாக இருந்தாலும் - ஏழ்மையான கோயிலாக இருந்தலும் - ஆதிதிராவிடர் பகுதியில் இருக்கும் கோயிலாக இருந்தாலும் - அவற்றையும் ஆலயமாகவே கருதி, அதற்கு உதவி செய்யும் அரசு தான் இந்த திராவிட மாடல் அரசாகும்.

மதம் - ஜாதி - வேற்றுமை மட்டுமல்ல - கோவில் - சாமி வேற்றுமையும் இந்த அரசுக்கு இல்லை. அனைத்து இறையியல் தலங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறோம். அதனால் தான் இம்மேடையில் அமர்ந்திருக்கும் சமயச் சான்றோர்கள் மட்டுமல்ல, பலரும் இந்த அரசை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் ஏன்? - அதற்கு பின்னால் உள்ள அரசியலை உடைத்த முதலமைச்சர் !