Tamilnadu

திருமகன் ஈவெரா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை பயணம்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மூத்த மகன் திருமகன் ஈவெரா(46). இவர் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருந்து வந்தார். திருமகன் ஈரோட்டிலேயே தங்கியிருந்து தொகுதி பணிகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து தகவல் தெரிந்ததும், அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் இன்று காலை முதல் திருமகனின் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மதியம் சுமார் 12.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா காலமானார்.

இதையடுத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள இல்லத்தில் திருமகன் ஈவெரா உடல் வைக்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமானம் நிலையம் வந்தார். அவருடன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கேஎன்.நேரு, காந்தி ஆகியோர் உடன் வந்தனர்.

தமிழக முதல்வர் கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஈரோடு செல்கின்றார். அங்கு காலமான சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். தொடர்ந்து மீண்டும் கார் மூலம் கோவை வரும் முதல்வர் கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்க உள்ளார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்க உள்ளனர்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்துகொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்து வந்தவர் ஈ.வெ.ரா. திருமகன்.

ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது. தனது அன்புமகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவன் அவர்களை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்.

ஈ.வெ.ரா. திருமகன் அவர்களின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது” : முதல்வர் உருக்கமான இரங்கல்!