Tamilnadu

“பொய் பேசி மாட்டிக்கொண்ட ஷர்மிகா - விரைவில் நடவடிக்கை..?” : எச்சரித்த இந்திய மருத்துவ இணை இயக்குநர் !

இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் வந்ததில் இருந்தே, இந்துத்துவ சிந்தனைகளை மக்கள் மீது திணிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதில் முதற்படியாக 'மாடு'. மாட்டை வைத்து அரசியல் செய்வது என்றால் அது பா.ஜ.க. மட்டும்தான். மாட்டை கடவுளாக பாவிக்க வேண்டும், மாட்டு சாணி மருத்துவ குணம் நிறைந்தது, கோமியத்தை குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் என பல மூட நம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைக்க முயன்று வருகிறது.

அதோடு கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கோமியத்தை குடித்தால், கொரோனா அண்டாது என்ற மட்டமான கருத்தையும் வெளிப்படுத்தியது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல். அதுமட்டுமின்றி, மருத்துவர் ஒருவர் மாட்டு சாணத்தை அள்ளி சாப்பிடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இப்படி இருக்கையில், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றும், தடை செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவ கும்பல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது மட்டுமின்றி, மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தேச விரோதியாக கருதி வெறுப்பு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அந்த கும்பலை, பலரும் மதிப்பதே இல்லை. இதனால் மருத்துவ ஆலோசனை என்ற பெயரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளது பா.ஜ.க.வினர். அதில் தற்போது சிக்கியுள்ளது பா.ஜ.க மாநில நிர்வாகி டெய்சியின் மகள் ஷர்மிகா.

அதவாது பா.ஜ.கவின் மாநில நிர்வாகியாக இருப்பவர் டெய்சி. இவர் அண்மையில் திருச்சி சூர்யாவின் ஆடியோ சர்ச்சையில் சிக்கினார். அவ்வளவு கேவலமாக சூர்யா பேசியும் கூட "நாங்கள் அக்கா - தம்பி போன்றவர்கள்" என்று பேட்டியளித்தார். இதற்காகவே நெட்டிசன்கள் இவரை கிண்டலடித்து வந்தனர்.

இந்த நிலையில், இவருக்கு ஷர்மிகா என்ற மகள் உள்ளார். சித்த மருத்துவம் படித்த இவர், பிரபல யூடியூப் சேனலுக்கு மருத்துவ குறிப்புகள் வழங்கி வருவார். உடல் உபாதைகள், இதை சாப்பிடலாம் - இதை சாப்பிடக்கூடாது என்று டிப்ஸ் வழங்கி வருவார்.

இப்படி மருத்துவர் என்ற போர்வைக்குள் இருந்து யூடியூப் சேனல் மூலம் மறைமுக மத பிரச்சாரத்தை செய்வதாக ஷர்மிகாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஏனெனில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் மாட்டுக்கறி, கோழிக்கறி உட்பட அனைத்தையும் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மாட்டுக்கறி என்பது நாம் கடவுளாக பார்க்கும் ஒரு அழகான விஷயம். அதையும் மீறி சொல்ல வேண்டுமானால், இந்திய மக்கள் DNA-விலே தங்களை விட பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் ஆகக்கூடிய சக்தி இல்லை. ஆடு, கோழி, கெளதாரி என நம்மை விட சிறிய மிருகங்களை சாப்பிட்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் பிரச்னை ஏற்படும்" என்றார்.

தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "எடை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு, 3 கிலோ எடை குறைந்தால் கூட, பின்னர் ஒரே ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் அதே 3 கிலோ எடை ஒரே நாளில் ஏறும்" என்றார். இதனைத் தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்த கூடாது; பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சிறந்தது. எனவே அதனை சாப்பிடுவதில் கோழிகளில் கவனம் வேண்டும்" என்றார்.

இவ்வாறு அவர் அளிக்கும் பேட்டியில், மறைமுக மதப்பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறார். இதனை தங்களுக்கு சாதகமாக நெட்டிசன்கள் பயன்படுத்தி கிண்டலடித்து வருகின்றனர். இருப்பினும் இவர் கொடுத்த தகவலின் பேரில், சிலர் அதனை நம்பி பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில் அவர் கூறிய தகவல்களை குறித்து பிரபல மருத்துவர்கள் முற்றிலும் முரண்படுவதாகவே தெரிகிறது. அதாவது பொதுவாகவே பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டை சிறந்தது என்று கருத்து உலாவி வருகிறது.

ஆனால் இது குறித்து 2017-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயங்கும், கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஓம் பிரகாஷ் தனது ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒரு நாட்டுக்கோழி 12 வாரங்களுக்குப் பிறகு கறி பயன்பாட்டிற்காகச் சந்தைக்கு வருகிறது. சராசரியாக ஒரு நாட்டுக்கோழி 80 முதல் 150 வரை முட்டையிடும். ஆனால் பிராய்லர் கோழி இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. 35 முதல் 38 நாட்களில் ஒரு பிராய்லர் கோழி சந்தைக்குக் கறி பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுகிறது.

அடுத்தபடியாக முட்டைக்காக மட்டுமே லேயர் கோழிகள் என்ற வகை வளர்க்கப்படுகிறது. இதன் முட்டையிடும் பருவமான 20 முதல் 72-வது வாரக் கால கட்டத்தில் 330 முதல் 350 வரையிலான முட்டைகளையிடும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கோழிகள் எல்லாம் முட்டை உற்பத்திக்காக மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

ஒரு மனிதர், நாள்தோறும் குறைந்தது 2 முட்டைகளாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் இங்கு முட்டை உற்பத்தி குறைந்து காணப்படுவதாலே ஒரு நபருக்கு 1 முட்டை கிடைப்பதே சில சமயங்களில் அரும்பாடாக இருக்கிறது. எனவே இதுபோன்ற கோழி வளர்ப்புகள் இருக்கிறது.

எனினும் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் புரதம், வைட்டமின் B3, வைட்டமின் B2, குளோரின், சோடியம், பொட்டாசியம், ஜிங்க் மற்றும் சல்பர் உள்ளது. மஞ்சள் கருவில் வைட்டமின் A, வைட்டமின் D மற்றும் வைட்டமின் E ஆகியவை உள்ளது. மேலும், வைட்டமின் B12, ஃபோலிக் அமிலம், கோலின், லுடீன், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் பொட்டாசியம் உள்ளது.

அதேபோல, அனைத்து கோழி முட்டைகளில் உள்ள வைட்டமின், மினரல்ஸ், புரதம் மற்றும் கால்சியம் சத்துக்களின் அளவு ஒன்றுதான் என ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் கட்டுரையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக "நம்மை விட பெரிய மிருகமாக மாட்டை நாம் தின்றால், அது இந்திய மக்களால் செரிமானம் செய்ய முடியாது" என்று கூறியிருந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ஆட்டுக்கறி மற்றும் மாட்டுக்கறி இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான சத்துக்களே உள்ளன. சத்துக்கள் ஒரே அளவில் இருக்கும் போது அதன் விலையினை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது.

ஆட்டை விட மாட்டுக்கறியின் விலை சற்று குறைந்தேதான் காணப்படும். ஆடு, மாடு, கோழி, மீன் என்பது அவரவர் விருப்பமான உணவு தானே தவிர, யாரும் கட்டயப்படுத்தி சாப்பிடக்கூடாது என்று சொல்ல முடியாது." என்றார்.

இந்நிலையில், பீப் சாப்பிடக்கூடாது; கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்; நுங்கு சாப்பிட்டா மார்பகம் பெரிசாகும்; குலோப்ஜாமூன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும் என அடித்துவிட்ட ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவ இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கூறுகையில், ஷர்மிகா ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக, சமூக ஊடகங்களில் கருத்துகள் சொல்ல எந்த தடையும் இல்லை. ஆனால் மருத்துவ விதிகளின் படி தவறான கருத்தை பரப்பக் கூடாது.

அதுவும் சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி இல்லை எனவும் எந்த இறைச்சியும் சாப்பிக் கூடாது என்று குறிப்பிடவில்லை. யாருக்கு சத்தான உணவு தேவைபடுகிறதோ அது சைவம் ஆனாலும் சரி, அசைவம் ஆனாலும் சரி அவர்கள் விருப்பம் படி சாப்பிடலாம். மேலும் ஷர்மிகா சொல்வது போன்ற எந்த ஆதாரமும் இல்லை. தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இதுபோல பேசுகிறார்.

ஒரு மருத்துவர் மருத்துவரீதியான கருத்துகளை மட்டுமே மக்களிடையே சொல்லவேண்டும். மருத்துவத்திற்கு அப்பாற்றப்பட்டு சொல்லக்கூடாது, மேலும் மருத்துவ ரீதியாக எழுந்த ஹர்மிகா கருத்தில் மீது யாரேனும் புகார் அளித்தார் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவர் பேசுவதைக் கேட்டு சுயமாக மருத்துவத்தை மேற்கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் 1541 மருத்துவ மையங்கள் உள்ளன. அங்குச் சென்று இலவசமான ஆலோசனைகளையும் முறையான சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அம்புட்டும் பொய்..” பாஜக டெய்சி மகள் ஷர்மிகாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. என்னதான் செய்தார் அவர் ?