Tamilnadu

திருமணம் நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் குந்தை இல்லை.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த தம்பதி!

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி துலுக்கானம். இந்த தம்பதிக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்குக் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் குழந்தை இல்லாததால் தம்பதிகள் மன வருத்தத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி குழந்தை தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தம்பதியின் வீடு கடந்த மூன்று நாட்களாக பூட்டியே இருந்துள்ளது.

இவர்களின் ஆள்நடமாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்நிலையத்திற்குத் தெரிவித்துள்ளனர். பிறகு போலிஸார் அங்கு வந்து பார்த்தபோது, தம்பதியின் வீடு உட்புறமாகத் தாழ் இடப்பட்டிருந்தது.

இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததை போலிஸார் கண்டனர். பிறகு இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தை இல்லாத விரகத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் சக்திவேல் மனைவி துலுக்கானத்தை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துலுக்கானம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா என்பது உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தெரிய வரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

Also Read: 2 குழந்தைகளை ஆற்றி வீசி தற்கொலை செய்து கொண்ட தம்பதி: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!