Tamilnadu
“நல்ல படியாக சிகிச்சை முடியும்..” : ஆவடி சிறுமி டானியாவிடம் போனில் பேசி நலம் விசாரித்த முதலமைச்சர் !
முக சிதைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு மீண்டும் தொடர் சிகிச்சைக்காக தண்டலம் சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆவடி சிறுமி டானியாவிடம் செல்போனில் நலம் விசாரித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியது. இதனை சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்ற நிலையில், பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து சிறுமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமுக வலைதளம் வாயிலாக உதவி கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் உத்தரவின் பேரில் சிறுமி டான்யாவுக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த அகஸ்ட் மாதம் 23ம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து முதல்வர் நேரில் வந்து சந்தித்து டானியாவிற்கு ஆறுதல் கூறி இருந்தார்.
இந்த நிலையில் அறுவைச் சிகிச்சையின் போது வாய் பகுதியில் பொருத்தப்பட்ட சிறிய கிளிப்பை எடுக்க மீண்டும் தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மருத்துவமனைக்கு சென்று சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களிடம் நலம் விசாரித்தார்.
அப்போது அமைச்சருக்கு போன் செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறுமியிடம் நலம் விசாரித்தார். நல்ல படியாக சிகிச்சை முடியும் என்றும் நன்றாக படிக்கிறாயா என்றும் புத்தாண்டு வாழ்த்தும் கூறினார். இதனை தொடர்ந்து அவரது தாய் சௌபாக்யாவிடம் பேசிய முதல்வர் தைரியமாக இருங்கள் என்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் கூறினார். சிறுமியின் முகத்தில் பொருத்தப்பட்டுள்ள க்ளிப்பை அகற்ற அறுவை சிகிச்சை இன்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”