Tamilnadu

“கோரத்தாண்டவமாடிய ஆழிப்பேரலையின் 18ம் ஆண்டு நினைவு தினம்” : தமிழகம் முழுக்க பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி !

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், இந்தியப் பெருங்கடலில் உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலை இந்தியாவின் கடலோரப்பகுதிகளில் கோரத் தாண்டவமாடியது.

இந்தோனேசியா, இந்தியா மட்டுமல்லாது மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் கடலோரப் பகுதிகளையும் தாக்கி, அங்கிருந்த மக்களை வாரிச் சுருட்டியது சுனாமி. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

சுனாமியால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய பகுதிகள் கடுமையான சேதங்களைச் சந்தித்தன. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியது.

இன்று சுனாமியின் 18ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தங்கள் சொந்தங்களை சுனாமியால் இழந்த மக்கள், கடற்கரைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். கடலில் பால் ஊற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், இன்று நாகை, கடலூர், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாமல் துக்கம் அனுசரித்து வருகின்றனர். அதேப்போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி முதல் குளச்சல் வரை பல்வேறு மீனவ கிராமங்களில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் பேரணி, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

மணக்குடி மீனவ கிராமத்தில் 117 பலியானதை தொடர்ந்து அங்குள்ள புனித அந்திரியார் ஆலயத்தில் சிறப்பு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மவுன ஊர்வலமாக வந்து 117 பேர் அடக்கம் செய்யப்பட்ட நினைவு ஸ்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Also Read: "24 மணி நேரமும் இந்து - முஸ்லிம் பெயரில் வெறுப்பை பரப்பும் பா.ஜ.க": ராகுல் காந்தி கடும் தாக்கு!