Tamilnadu
தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம்?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?
மூதறிஞர் இராஜாஜியின் 50 வது ஆண்டு நினைவு சிறப்புப் புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தா.மோ அன்பரசன் , சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்," சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உள்ளிட்டவைகள் கையிருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகள் எதுவும் விளக்கிக் கொள்ளப்படவில்லை. எனவே மக்கள் அவரவர் நலன் கருதி முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கடந்த 15 நாட்களாகத் தமிழ்நாட்டில் நாள்தோறும் 4000 முதல் 5000 RTPCR பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 10க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் முதல் தவணையில் 96% தடுப்பூசியும், இரண்டாம் தவணையில் 92% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இதனால் தமிழ்நாட்டில் 90% பேருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக கடந்த ஆறு மாத காலமாக கொரோனாவால் இறப்புகள் நிகழவில்லை. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!