Tamilnadu

அப்பளம் போல் நொறுங்கிய கார்.. IT பெண் பரிதாப பலி.. சென்னையில் சோகத்தில் முடிந்த சுற்றுலா !

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா (24). இன்ஜினியரான இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள விடுதியில் தங்கி, ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவரும், இவரது அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அபிஷா (26), கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (29), பங்கஜ் (18) உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். நேற்று விடுமுறை என்பதால் சென்னையை சுற்றி பார்க்க இவர்கள் அனைவரும் நேற்று காலையிலேயே காரில் சென்றனர்.

அப்போது இவர்களது கார் துரைப்பாக்கத்தில் இருந்து ரேடியல் சாலை வழியே பல்லாவரம் நோக்கி சென்றது. அந்த காரை ஸ்ரீதர் என்ற இளைஞர் தான் ஓட்டி சென்றுள்ளார். அவருக்கு அருகில் பங்கஜும், பின் இருக்கையில் கிருத்திகா, அபிஷா ஆகியோரும் அமர்ந்து பயணம் செய்தனர்.

அந்த சமயத்தில் பள்ளிக்கரணை குப்பை கிடங்கு அருகே சென்றபோது திடீரென இவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அந்த கார் சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் பின் கதவு திறந்ததால் அதன் அருகே அமர்ந்திருந்த கிருத்திகா உருண்டு விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்ற 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இந்த கோர சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அடிபட்டு கிடந்தவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கிருத்திகா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மீதி இருந்த மூன்று பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுடன் காரில் சென்ற ஐ.டி பெண் ஊழியர் ஒருவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: துண்டு துண்டாக வெட்டப்பட்ட பழங்குடியின இளம்பெண்.. நாய்களுக்கு இரையாக்கிய கணவரின் குடும்பம்.. அதிர்ச்சி !