Tamilnadu
ஆளுநரால் தொடரும் உயிர்பலி? : “ஆன்லைன் சூதாட்டத்தில் என்ஜினீயர் தற்கொலை” - கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ‘ஆன்லைன் சூதாட்டம்‘ மூலம் அதிக தற்கொலைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்பதாகக் கூறி, அ.தி.மு.க. அரசு. அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றியது. ஆனால், உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் சுட்டி அச்சட்டத்தை செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்து விட்டது.
இந்த நிலையில், தி.மு.க. தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் வலுவான முறையில் இயற்றிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக் குழுவை நியமித்து, அவரது கருத்துரை - பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, அவசரச் சட்டம் (ordinance) இயற்றப்பட்டு, பிறகு, அடுத்துக் கூடிய தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் தடைக்கான தனி மசோதாவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு , கடந்த அக்டோபர்-28 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
ஆளுநர் விளக்கம் கேட்டதையடுத்து, தமிழக அரசு உரிய விளக்கத்தை அளித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தக்க காரணம் இன்றி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் அவசர சட்டமும் காலாவதி ஆகி விட்டது.
இந்த மசோதா என்பது உயிர்களைக் காக்கும் முக்கியமான மசோதா, ஆன்லைன் சூதாட்டம் மூலம் கைப்பொருள் இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் வேதனையான நிலை அன்றாடச் செய்தியாகும் நிலையில், கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர் தற்கொலைசெய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் (வயது 29). என்ஜினீயர். இவர் ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம் கிடைத்தது. நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானர். அதன் மூலம் தான் சேர்த்து வைத்து இருந்த பணத்தை இழந்தார்.
எப்படியாவது சூதாட்டத்தில் விட்ட பணத்தை திருப்பி வென்று விடலாம் என்ற முயற்சியில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார். கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் சங்கர் இழந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
கடந்த 12-ந் தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.
அறையில் இருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து காட்டூர் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அறையில் இருந்து சங்கர் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் “ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும்” இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.
ஆனால் அவர் ஆன்லைனில் எவ்வளவு பணத்தை இழந்தார் என்பதையும் நண்பர்களிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பதையும் குறிப்பிடவில்லை. பின்னர் போலிஸார் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காட்டூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!