Tamilnadu
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு கிடைத்த அடுத்த வெற்றி!
அ.தி.மு.க ஆட்சியின் போது நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பட்டா, சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் காலத்தை எடப்பாடி பழனிசாமியின் அரசு கடத்தியது.
பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றிக் கொடுத்து வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே நரிக்குறவர், பழங்குடியினர் என விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை தேடிச் சென்று நிறைவேற்றிக் கொடுத்து வருகிறார்.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த 5 வது மாதத்திலேயே 2084 புதிய கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 5900க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதை எல்லாவற்றையும் விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆவடி பகுதியில் அமைந்துள்ள குறவர் இன மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அப்போது, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று காலை உணவாக கறிக்குழம்புடன் இட்லியும், வடையும் சாப்பிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அன்பு தமிழ்நாட்டு மக்களையே நெகிழ்ச்சியடைய வைத்தது.
இதனைத் தொடர்ந்து நரிக்குறவர் மற்றும் குருவிக்கார சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதே மாதம் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாடு தொடர்பான 15 கோரிக்கைகளையும் வழங்கியிருந்தார். அதில் நரிக்குறவர் மற்றும் குருவிக்கார சமூகங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கையாக இருந்தது.
மேலும், இக்கோரிக்கை குறித்து நாடாளுமன்ற விவாதங்களிலும் தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்திடும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கடந்த 9-ம் தேதி தாக்கல் செய்தார்.
இந்நிலையில், உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பிறகு இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது மாநிலங்களவையில் அடுத்த வாரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகளையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!