Tamilnadu

‘பறக்கும் அணில்.. ராட்சத பல்லி’ என விமான நிலையத்தை அலறவிட்ட சென்னை பயணி - சூட்கேஸில் சிக்கிய மர்ம பொருள்?

தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலையம் சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி பெரிய கூடை ஒன்றை எடுத்து வந்தார். இதைப் போன்ற கூடைகளில் வழக்கமாக, தாய்லாந்து நாட்டில் இருந்து அபூர்வ வகை உயிரினங்கள் எடுத்து வரப்படுவதால், சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த பயணியையும் நிறுத்தி அவருடைய கூடையை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதிகாரிகள் சந்தேகப்பட்டது போலவே, அவருடைய கூடைக்குள், அபூர்வ வகை உயிரினங்கள் இருந்தன. ‌

தென்கிழக்கு ஆஸ்திரேலிய வனப்பகுதியில் காணப்படும் சுகர் ரைடர் எனப்படும் பறக்கும் அணில் வகைகள் எட்டும், தென் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளில் காணப்படும் மர்மோசெட் என்ற குரங்கு குட்டிகள் மூன்றும், தென் அமெரிக்கா வனப்பகுதியில் காணப்படும் தேகு லிசார்ட் என்ற ராட்சச பள்ளி குட்டிகள் மூன்றும் இருந்தன.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அதோடு பெசன்ட் நகரில் உள்ள வன குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தினார்கள். இவைகள் அனைத்துமே இந்தியாவுக்குள் கொண்டு வர தடை செய்யப்பட்டவைகள். மேலும் இவைகளினால் வெளிநாட்டு நோய் கிருமிகள் பெரும் அளவு இந்தியாவுக்குள் பரவி விடும், அதோடு சர்வதேச வன உயிரின துறையில் முறையான அனுமதி பெறவில்லை.

இந்திய வனத்துறையின் அனுமதியும் இல்லை. இதை அடுத்து இந்த உயிரினங்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர். அதன்படி சுங்க அதிகாரிகள் இந்த அபூர்வ வகை வெளிநாட்டு விலங்குகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கே விமானத்தில் திருப்பி அனுப்புகின்றனர். அதற்காகவும் செலவை அந்த உயிரினங்களை கடத்தி வந்த பயனிடம் வசூலிக்கின்றனர்.

மேலும் சட்ட விரோதமாக, இந்த உயிரினங்களை கடத்தி வந்த பயணியை கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில் துபாயிலிருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி தீவிர விசாரணை நடத்தினர்.

அதன் பின்பு அவர்கள் உடமைகளை சோதித்த போது, அவருடைய சூட்கேசுகளுக்குள் ரகசிய அறைகள் வைத்து பெரும் அளவு தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தனர். இரண்டு பேருடைய சூட்கேஸ்களிலும், மொத்தம் ஒரு கிலோ 36 கிராம் தங்கம் நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.48 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அதோடு கடத்தல் பயணிகள் இரண்டு பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் வந்த அபூர்வ வகை உயிரினங்களை கடத்தி வந்ததை கண்டுபிடித்து அதை தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பியதோடு, துபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னைக்கு கடத்தி வந்த ரூபாய் 48 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்து, மூன்று பயணிகளை கைது செய்துள்ளனர்.

Also Read: “ரயில் டிக்கெட் confirm ஆகவில்லையா? - கவலை வேண்டாம்.. இனி இலவச விமான பயணம்” : Trainman அசத்தல் அறிவிப்பு!