Tamilnadu

இறுதி சடங்கில் மாலை வேண்டாம்.. அதற்கு பதில் ரூ.200 கொடுங்க: ஆச்சரியப்பட வைக்கும் ஒரு கிராமத்தின் முடிவு!

பொதுவாக யாராவது இறந்து விட்டால் அவரது உடலுக்குச் சிறிய முதல் பெரிய மாலைகள் வரை போட்டு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

மேலும் துக்க வீட்டிற்கு வருபவர்கள் அனைவருமே இறந்தவர் உடலுக்கு மாலை போடுவார்கள். இதனால் மாலைகள் அதிகம் சேர்ந்து விடும். இப்படி அதிகம் சேர்ந்த மாலைகள் இறுதி ஊர்வலத்தின் போது சாலைகள் முழுவதும் தூவி செல்வதற்குப் பயன்படுத்தப்படும்.

இந்நிலையில் ஒரு கிராமத்தில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இனி இறந்தவர் உடலுக்கு ஒரே மாலை மட்டும் போதும். மாலைக்குப் பதில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 200 கொடுக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தான் பாலையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "இறந்தவருக்கு மாலைகள் போடும்போது அது அதிகம் சேர்ந்துவிடுகிறது.

மாலைகளை ஆட்கள் வைத்து வெட்டி நறுக்கி, ஊர்வலத்தில் செல்லும் போது வழி நெடுக்க மாலைகளைத் தூவிச் செல்கின்றனர்.இதனால் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்களாகின்றனர். இதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, மாலைக்குப் பதில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.200 கொடுத்தால் அந்த தொகையில் இறுதி சடங்கு நடத்த வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இறக்கும் அனைவரும் சமமாக இறுதிச் சடங்குகள் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார். கிராம மக்களின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சார்ஜ் செய்யப்படும் கால்பந்துகள்.. உள்ளே இருப்பது என்ன ? FIFA உலகக்கோப்பையை அதிரவைத்த நவீன தொழில்நுட்பம்!