Tamilnadu

1,03,508 பேருக்கு நலத்திட்ட உதவிகள்..“உங்க ஆட்சி சூப்பரா இருக்கு”: முதல்வரை கண்டு மகிழ்ந்த மக்கள்! #Album

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2022) தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், இராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

முதலமைச்சராக பதவியேற்றப் பிறகு முதன்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு (7.12.2022) சென்னையிலிருந்து தென்காசிக்கு இரயில் மூலம் பயணம் மேற்கொண்டார்.  தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (8.12.2022) காலை சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தென்காசி இரயில் நிலையத்தில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெரியோர்கள், தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இன்று காலை தென்காசி இரயில் நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் முதலமைச்சர் திரண்டிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

Also Read: "5 லட்சம் மாணவர்களை பாதிக்கும் முடிவை திரும்ப பெறுக": பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!