Tamilnadu

பொய்களை தோலுரிப்போம்.. முதல்வரின் சாதனையை விளக்க அனைவரும் ஊடகமாவோம்.. அதிரடி காட்டும் திமுக IT Wing!

தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கிட கழக உடன்பிறப்புகளே அனைவரும் ஊடகமாகவோம் என தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

முதலமைச்சர் நம் கழகத் தலைவர் அவர்கள் ஒவ்வொரு உடன்பிறப்பும் ஊடகமாக மாறி, எதிர்த்தரப்பினரின் பொய்ப் பரப்புரைகளையும், வதந்திகளையும், அவதூறுகளையும் முறியடித்திட வேண்டும் என ‘உங்களில் ஒருவன்' கடிதம் வாயிலாக அன்புக் கட்டளையிட்டிருக்கிறார்.

காட்சி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், திராவிட மாடல் முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசின் சாதனைத் திட்டங்களையும், அதன் பயன்களையும் முழுமையான அளவில் மக்களிடம் கொண்டு சென்று, பொய்களையும் வதந்திகளையும் அவதூறுகளையும் முறியடித்திடும் பணியில் முனைப்புடன் இறங்கியுள்ளது கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி.

மக்கள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - மண்டலபொறுப்பாளர்கள் தங்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைத்து ஒருங்கிணைந்து நிர்வாகிகளும் தங்களின் முன்னெடுப்புகளையும், அணியின் செயல்பாடுகளையும், தங்களின் பணி சார்ந்த தகவல்களையும் கழகத் தகவல் தொழில் நுட்ப அணிக்குத் தெரிவித்திட வேண்டுகிறேன். அவற்றை சமூக வலைத்தளங்கள் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை தகவல் தொழில்நுட்ப அணி தொடர்ச்சியாக மேற்கொள்ளும்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர், சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆகியவற்றின் போது உறுப்பினர்கள் அளிக்கும் கோரிக்கைகள், அவற்றிற்கு கிடைத்த சாதகமான பதில்கள், அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உடன்பிறப்புகளின் ஊடகமாக தகவல் தொழில்நுட்ப அணி செயல்படும்.

இச்செய்திகளை சேகரித்து வழங்குவதில் கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் தங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பாடுவார்கள்.

அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள், மற்ற நிர்வாகிகள் நியமனம் விரைவில் நடைபெற உள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளின் பணிகளும் அவரவர் பகுதியில் முழுமையாகத் தெரியப்படுத்தப்படும். நமக்கு நாமே ஊடகமாக செயல்படுவதற்கான இந்த முன்னெடுப்புக்கு தங்களின் ஒத்துழைப்பைக் கோருகிறேன்.

இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Also Read: திணறும் இந்திய பொருளாதாரம் : 5வது முறையாக ரெப்போ வட்டியை உயர்த்தியது RBI.. தனி நபர் கடன் உயர வாய்ப்பு!