Tamilnadu

அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம்.. சர்ச்சை போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணத்தில் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் அம்பேத்கருக்குக் காவி உடையும், அவரது நெற்றில் விபூதி மற்றும் குங்குமம் வைத்துள்ளது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. மேலும் காவி (ய) தலைவனின் புகழைப் போற்றுவோம் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் இந்துத்துவ வர்ணாசிரம கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்து வந்தவர். ஆனால் அவருக்கு தொடர்ச்சியாகக் காவி சாயம் பூசப்படும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வகையில் தான் அம்பேத்கருக்கு காவிடை, விபூதி, குங்கும் வைத்ததுபோன்று ஒரு பொய்யான படத்தைச் சித்தரித்து இந்து இந்து மக்கள் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து உடனடியாக கும்பகோணத்தில் ஒட்டப்பட்டிருந்த அனைத்து போஸ்டர்களும் அகற்றப்பட்டன. மேலும் இந்து மக்கள் கட்சியின் இந்த செயலுக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த போஸ்டரை ஒட்ட ஏற்பாடு செய்த இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் குருமூர்த்தியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: 21 சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநர்: மக்கள் கூடும் இடங்களில் பேனர் வைத்து அம்பலப்படுத்திய திமுக MP!