Tamilnadu

அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு இருக்கும் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த சுமார் 20 ஆண்டு காலமாக முதியவர் ஒருவர் உடைகள் அணியாமல் சுற்றி திரிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த பகுதிவாசிகளிடம் யாசகம் பெற்று உணவு உண்டு வந்துள்ளார். மேலும் அந்த பகுத்தியில் இருக்கும் அரளிச் செடி அருகே உறங்கியும் வந்துள்ளார்.

இவருக்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் தினந்தோறும் உணவு வழங்கி வந்துள்ளனர். பார்ப்பதற்கு யாருமில்லாத ஆதரவற்றோர் போல் இருக்கும் இவரை பயன்படுத்தி ஒரு கும்பல் பணம் வசூலிக்க எண்ணியுள்ளது. அதன்படி இந்த முதியவரை 'அரளி சித்தர்' என்றும் இவரை வழிபட்டால் நன்மை உண்டாகும் என்றும் போலி செய்தியை அந்த கும்பல் பரப்பி வந்தனர்.

இதனையும் நம்பிய சிலர் இவரிடம் வந்து ஆசி பெற்று போனர். நாளுக்கு நாள் கூட்டம் சேருவதை கண்ட அந்த கும்பல், இவருக்கு தகரக்கொட்டகை அமைத்து அதில் இவரை இருக்க வைத்தனர். இருப்பினும் இவர் அங்கிருந்து ஓடி, அரளி செடி அருகே அமர்ந்து வந்துள்ளார். மீண்டும் அவரை மீது இதே கொட்டகைக்கு அந்த கும்பல் அழைத்து வந்து இருக்க வைத்துள்ளனர்.

அதோடு இவர்கள் இதற்காக உண்டியல் ஒன்றையும் அமைத்து பணம் வசூலித்து வந்துள்ளனர். அரளி சித்தர் தொடர்பான செய்தி சமூக ஊடகத்தில் பெரிதாக வைரலான நிலையில் இந்த நிகழ்வு குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா (காவிரி குண்டாறு சிறப்பு dro) தலைமையில், அரவக்குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார், அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டனர்.

மேலும் அந்த முதியவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தராக மாற்றப்பட்ட நிகழ்வை அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதியவரை மீட்கும் பணிக்காக சுமார் 100 பேர் போலீசார் பாதுகாப்பில் இருந்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அரளி சித்தராக மாற்றப்பட்டு, அதன் மூலம் பணம் வசூலித்து வந்த கும்பலிடம் இருந்து முதியவர் தற்போது அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த முதியவர் பெயர் சுப்பிரமணி என்றும், இவரது சொந்த ஊர் சேலம் என்றும், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பயணிகள் கவனத்திற்கு.. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்: திக் திக் சம்பவம்!