Tamilnadu

ஒருபுறம் தங்கப் பதக்கம்.. மறுபுறம் தந்தை இறப்பு செய்தி: காமன்வெல்த் அரங்கில் கதறி அழுத தமிழக வீராங்கனை!

நியூசிலாந்து ஆக்லாண்டில் நவம்பர் 28ம் தேதியில் இருந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாட்டு சேர்ந்த 11 வீரங்கள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒருவர் தான் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லோகப்பிரியா.

இவர் காமன்வெல்த் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கித் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியை அவர் சக வீரர்களுடன் 5 நிமிடம் கூட கொண்டாடமுடியவில்லை.

அதற்குள் அவரது பயிற்சியாளர் சொன்ன ஒரு செய்தி அவரை அப்படியே கதறி அழவைத்துவிட்டது. தங்கம் பதக்கம் வாங்கிய அதே நேரில் ஊரில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை லோகப்பிரியாவின் பயிற்சியாளருக்கு அவரது உறவினர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.

பின்னர் போட்டிகள் முடிந்து பதக்கம் வாங்கிய பிறகுதான் அவரது பயிற்சியாளர் இந்த செய்தியைக் கூறியுள்ளார். இதைகேட்டு அப்படியே உடைந்த லோகப்பிரியா, "தங்கம் வாங்கனும்,சாதிக்கனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

இப்போ தங்கம் வாங்கும் போது அதைப் பார்க்க தந்தை இல்லையே" என கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்துள்ளது. லோகப்பிரியாவின் தந்தைப் பெயர் செல்லமுத்து. இவர் தனது குடும்ப வருமையிலும் மகளை எப்படியாது விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என லோகப்பிரியாவிற்கு பக்கபலமாக இருந்து ஊக்கம் கொடுத்து வந்துள்ளார்.

தற்போது அவரது ஆசைப்படி மகள் தங்கப் பதக்கம் வென்றபோது செல்லமுத்து உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது கல்லுக்காரன்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Also Read: கோவில்பட்டியில் எழுந்த எழுத்தாளர் கி.ரா திருவுருவச்சிலை - நினைவரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் !