Tamilnadu

“உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் !

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்துடன் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு மடத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று இரவு நேரம் கீழையூர் பகுதியில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மடத்திற்கு செல்ல விளைந்துள்ளார்.

அப்போது வழி சரியாக தெரியாத காரணத்தினால் கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். முதலில் சரியாக வழிகாட்டி வந்த மேப்பை நம்பி மேலும் மேலும் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது கோவிலில் இருந்து நேராக சென்று வலப்புறம் உள்ள பாலத்தில் திரும்பி செல்ல வேண்டும் என்று கூகுள் மேப் காட்டியுள்ளது.

ஆனால் அதனை சரிவர புரிந்துகொள்ளாத ஸ்ரீராம், மெயின் ரோட்டில் செல்வதற்கு பதிலாக தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் குறுகிய சாலையில் சென்றுள்ளார். மேலும் தொடர்ந்து ரோட்டை கவனிக்காமல் மேப்பை கவனித்தவாறே காரை ஓட்டியுள்ளார். இந்த நிகழ்வில் எதிர்பாராத விதமாக குறுகிய சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கார் இறங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் காரில் இருந்த ஸ்ரீராம் உட்பட குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து பத்திரமாக கரைக்கு வந்த அவர்கள் பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு மீட்பு படைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர்கள் வந்த பிறகு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் கிரேன் உதயோடு கார் மீட்கப்பட்டது.

முன்னதாக இதே போல் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது. குறிப்பாக கூகுள் மேப்பை நம்பி சென்ற ஒருவர் தனது காரை வயல்வெளியில் இறக்கிய சம்பவம்; முட்புதரில் சிக்கிய சம்பவம் என பல நடந்துள்ளது. இதனால் காவல்துறையினர் இது போன்ற நிகழ்வுகள் நேராமல் இருக்க கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

Also Read: வீட்டில் திருடி வீட்டாரிடமே Lift கேட்டு தப்பிக்க முயன்ற வட மாநில இளைஞர்.. சிக்கியது எப்படி ?