Tamilnadu

"மகாயோக்கியரை போல விமர்சனம் செய்ய இவர்களுக்கு யோக்கியதை இல்லை".. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.83.82 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:- மக்கள் தொண்டைத் தவிர மாற்றுச் சிந்தனை இல்லாத மக்கள் நல அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. பத்து ஆண்டு கால பாதாளத்தை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல, அதனை உடனே நடத்தி விட முடியுமா என்ற மலைப்பு கூட முதலில் இருந்தது.

ஆனால் அத்தகைய பாதாளத்தில் இருந்து தமிழகத்தை பல்வேறு வகைகளில் மீட்டெடுத்துவிட்டோம் என்பதுதான் உண்மை. போட்டி போட்டு தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வருகிறது. ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். அனைத்துத் துறையிலும் முன்னேற்றப் பாதைக்கு போய்க் கொண்டு இருக்கிறோம்.

வேளாண்மை உற்பத்தி அதிகமாகி இருக்கிறது. வேளாண் பாசனப் பரப்பு அதிகமாகி இருக்கிறது. உயர்கல்வியிலும் பள்ளிக் கல்வியும் பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறோம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தித் தந்ததன் மூலமாக பெண்களுக்கு நிரந்தர வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறோம்.

பதினைந்து மாத காலத்தில் ஒன்றரை இலட்சம் இலவச வேளாண்மை மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பாற்ற அனைத்தையும் செய்தோம்.

கொரோனாவை வென்று காட்டினோம். மழை- வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம். இவை அனைத்தும் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்திக் காட்டிய செயல்கள் ஆகும்.

ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது - ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணம் தான் கடந்த காலம் ஆட்சியாகும். கடந்த காலத்தில் தனது கையில் அதிகாரம் இருந்தபோது - கைகட்டி வேடிக்கை பார்த்து - தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தி - பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள் -

இன்றைய தினம் இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுப்பதையும்- பேட்டிகள் அளிப்பதையும் பார்த்து அவர்களை மக்கள் சிரிக்கிறார்கள். 'உங்கள் யோக்கியதை தான் எங்களுக்குத் தெரியுமே' என்று ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ஐயகோ கெடவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். ஐயகோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கு.

புலிக்கு பயந்தவன் - என் மேல வந்து படுத்துக்கோ - என்று சொல்வதைப் போல இம்மாதிரிச் சிலர் ஆபத்து - ஆபத்து என்று அலறிக் கொண்டு இருக்கிறது. இப்படிச் சொல்லும் சிலருக்கு இருக்கும் பதவி நிலைக்குமா என்று பயமாக இருக்கிறது.

அதனால் தான் மக்களைப் பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சி தான். விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது.

விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும். தங்கள் கையில் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்து விட்டு இன்று மகாயோக்கியரைப் போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை.

தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல இதுவரை அடையாத பெருமைகளையும் உயரத்தையும் அடைய வைப்பதுதான் நமது ஆட்சியின் குறிக்கோளாகும். அந்தக் குறிக்கோளை அடைய என்னை நானே ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். இந்த மேடையில் அமர்ந்துள்ள அமைச்சர்களது பங்களிப்பின் காரணமாக தமிழகம் அத்தகைய உயரத்தை விரைவில் பெறும் என்பதைச் சொல்லி விடை பெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: “உங்கள் மகனை பயங்கரவாதி என்று அழைப்பீர்களா?” : இஸ்லாமிய வெறுப்பை விதைத்த பேராசிரியரை அலறவிட்ட மாணவன்!