Tamilnadu

தொடர் உயிர் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம் : பணத்தை இழந்த வட மாநில பெண் எடுத்த விபரீத முடிவு !

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் தோற்ற தென்காசியை சேர்ந்த வட மாநில பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேலாயுதபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல் என்பவர் தனது மனைவி பந்தனா மஜ்கி என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.

இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிழைப்பு தேடி கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் தமிழ்நாட்டுக்கு வந்தனர். இருவரும் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கணவர் அஜய் குமார் அந்த பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் கூலி தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில், கணவர் வழக்கமாக காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவார். அப்படி தினமும் கணவர் சென்ற பிறகு வீட்டில் இருந்த மனைவியோ, ஆன்லைன் ரம்மி விளையாடுவார். காலப்போக்கில் அதற்கு அடிமையான அவர், இதை தினமும் விளையாடி வந்துள்ளார். இதற்காக பெண்ணின் சகோதரர் பணத்தை அடிக்கடி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி தொடர்ந்து விளையாடி இவர், சுமார் 70 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்படி தான் சம்பவத்தன்றும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பின்னர் கணவர் வேலைக்கு சென்ற பிறகு மனைவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அவர் வேலை முடித்து திரும்பி வந்து பார்க்கையில் மனைவி, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். தொடர்ந்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஆன்லைன் ரம்மி விளையாடியதும், அதன்மூலம் அவர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணத்தை இழந்ததும் தெரியவந்தது.

அதோடு இதனால் மனமுடைந்த அவர், கணவர் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதும் கண்டுபிடிக்க பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும் இது போன்ற ஆசையினால் சிறார்கள், இளைஞர்கள் தங்கள் பணத்தை இழந்து இறுதியில் தவறான முடிவை நாடுகின்றன.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: Selfie மோகம்.. நீர்வீழ்ச்சியில் பறிபோன 4 சிறுமிகள் உயிர்.. கர்நாடகாவில் சோகம் !