Tamilnadu

5 ஆண்டாக உருகி உருகி காதல்.. திருமணத்திற்குத் தடைபோட்ட பெற்றோர்: விபரீத முடிவெடுத்த காதல் ஜோடி!

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பீர்க்கங்காரணை அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். பட்டதாரியான இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த யுவராணி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஜெயராமன் வீட்டிற்குக் காதலி யுவராணி வந்துள்ளார். இதையடுத்து இருவரும் இணையம் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். பிறகு வேலைக்குச் சென்ற ஜெயராமனின் தாய் வீட்டிற்கு வந்தபோது மகன் மற்றும் யுவரானி ஒரே புடவையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

ஆனால் காதலர்கள் இருவருமே வேறு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணத்திற்குப் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளாததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காளான் சமைத்துச் சாப்பிட்ட தந்தை,மகன் உயிரிழப்பு.. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்: கர்நாடகாவில் சோகம்!