Tamilnadu

“ARIEL, SURF EXCEL பெயரில் போலி வாஷிங் பவுடர் தயாரித்த கும்பல்”: போலிஸ் விசாரணையில் சிக்கியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிடங்குகளில் பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி வாஷிங் பவுடர் தயாரிக்கப்பட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் எடப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள 3 தனியார் கிடங்குகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் பிரபல நிறுவனங்களின் பெயரில் (ARIEL, SURF EXCEL, RIN) போலியாக ஸ்டிக்கர் தயாரித்து வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவம் தயாரித்து வந்தது தெரிய வந்தது.

50 கிராம், 100 கிராம், அரை கிலோ, 1கிலோ பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சுமார் 1கோடி ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்களான 500 மூட்டை சோப்பு பவுடர், 50 கேன் சோப்பு திரவம், 6 பேக்கிங் இயந்திரங்களை சோழவரம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி வாஷிங் பவுடர் தயாரித்து வந்த தொழிற்சாலையின் மேனேஜர் முகமது இப்ராஹிம், சூப்பர்வைசர் ரவி, பிரின்ஸ்குமார், சந்திரபால் ஆகிய 4 பேரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலி சோப்பு தொழிற்சாலையின் உரிமையாளரான அருண், முன்னாவர் ஆகியோர் தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரையும் சோழவரம் போலிஸார் தேடி வருகின்றனர்.

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக ஸ்டிக்கர் தயாரித்து சோப்பு பவுடர், சோப்பு ஆயில் தயாரித்து வந்த தொழிற்சாலையில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருட்டு வழக்கில் சிக்கிய ஒன்றிய அமைச்சர்.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!