Tamilnadu

கொதிக்கும் தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை.. தந்தை கண் எதிரே நடந்த துயரம்!

சென்னை அம்பத்தூர் அருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயதுக் குழந்தை மீன்தொட்டிக்குள் விழுந்த பொம்மையை எடுக்கும்போது தலைகுப்புற கவிழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வீட்டில் குளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் தவறி விழுந்து மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், தாமரைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரசாக். இவருக்கு ஒரு வயதில் குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி குழந்தையைக் குளிக்க வைப்பதற்காகப் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் காய வைத்துள்ளார் ரசாக்.

இப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தவறுதலாகக் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் விழுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரசாக் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்பாக்கம் மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் குழந்தைகள் அருகே ஆபத்தான பொருட்களை வைக்கக்கூடாது என பெற்றோர்களுக்குத் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வந்தாலும் இவர்களின் கவனக்குறைவால் தொடர்ந்து இப்படி குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

Also Read: சிவப்பு நிற சூட்கேஸில் இருந்த சடலம்.. அலறியடித்து ஓடிய பயணிகள்: பஞ்சாப் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?