Tamilnadu

திடீரென பின்னோக்கி நகர்ந்த டிராக்டர்.. சக்கரத்தில் சிக்கி பலியான சிறுவன்.. சோகத்தில் மூழ்கிய கிராமம் !

சாலையில் நின்றுக்கொண்டிருந்த டிராக்டர் ஒன்று திடீரென பின்னோக்கி நகர்ந்தால், அதன் சக்கரத்தில் சிக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் திருவாரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை அடுத்துள்ள கீழ நிம்மேலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன் - வனிதா தம்பதி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில், இரண்டாவதாக சுவேதன் என்ற 14 வயதுடைய மகன் உள்ளார். திருவாரூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வரும் இவர், நன்றாக படிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் தனது வீட்டிலிருந்த டிராக்டரை எடுத்து ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கீழ நெம்மேலி பாலத்தில் டிராக்டரை நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக கீழே இறங்கியுள்ளார்.

அந்த சமயத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் திடீரென பின்னோக்கி நகர்ந்துள்ளது. இதை கவனிக்காத சிறுவன், நடந்துகொண்டிருந்தபோது அவர் மீது டிராக்டர் மோதியுள்ளது. அப்போது சிறுவன் மீது டிராக்டரின் சக்கரம் ஏறியதால் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வடுவூர் காவல்துறையினர் சிறுவனின் பெற்றோருக்கு தகவலளித்துடன், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கும் அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் ஓட்டி வந்த டிராக்டரின் சக்கரத்தில் சிறுவனின் தலை நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தலை திரும்பிய நிலையில் செத்து விழும் Zombie புறாக்கள்.. மனிதர்களுக்கு பரவுமா? பீதியில் இங்கிலாந்து மக்கள்