Tamilnadu

”விளையாட்டுத் துறையில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவோம்”: அமைச்சர் மெய்யநாதன் உறுதி!

தமிழ்நாடு முழுதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர் பார்த்திபன் சார்பில் ’தமிழ்நாடு கிரிக்கெட் லீக்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 160 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு 8 அணிகளாகப் பிரித்து இன்று முதல் வரும் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. சேலம் கந்தாஸ்ரமம் பகுதியில் அமைந்துள்ள எஸ். ஆர், பி கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் முதல் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கிவைத்தார்.

இதற்கு முன்னதாக துவக்க விழாவில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "கிராமப்புறத்தில் உள்ள திறமையான வீரர்களுக்கு இந்த போட்டி மிகவும் பயனுள்ளதாக அமையும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுத் துறைக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாகதான் செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலக நாடுகளே ஆச்சரியப்படும் வகையில் நடத்திக் காட்டியுள்ளார். இதேபோன்று பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், இந்த ஆண்டு 25 லட்சம் விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளோம். அடுத்த ஆண்டு மேலும் 25 லட்சம் வீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் விரைவில் ஒரு கோடி விளையாட்டு வீரர்களை உருவாக்கி சர்வதேச போட்டிகளிலும் தேசிய அளவிலான போட்டிகளிலும் நமது வீரர்கள் பதக்கம் பெறுவதற்கான நடவடிக்கை நடக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விளையாட்டில் இந்தியாவின் தலைநகராகத் தமிழ்நாட்டை மாற்றுவதே தமிழ்நாடு அரசின் குறிக்கோள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "'வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர்' அண்ணன் எ.வ.வேலு.." - அமைச்சருக்கு புகழாரம் சூட்டிய உதயநிதி ஸ்டாலின்