Tamilnadu

தன் உயிரை கொடுத்து மனைவி உயிரை காப்பாற்றிய கணவன்.. சுற்றுலா வந்த தம்பதிக்கு நடந்த சோகம்!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சியாம். இவருக்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த சுஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சியாம் டெல்லியில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார்.

இதையடுத்து தீபாவளி கொண்டாடுவதற்காக நாகர்கோவில் வந்துள்ளனர். தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய இவர்கள் நேற்று கீரிப்பாறை அருகே உள்ள காளிகேசத்து ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது ஆற்றில் மனைவி சுஷ்மா குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் சியாம் ஆற்றில் குதித்து மனைவியை மீட்க முயன்றுள்ளார்.

ஆனால் சியாம் பாறை இடுக்கில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மனைவி சுஷ்மா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கரை ஒதுங்கியுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த போலிஸார் சியாம் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சுஷ்மாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மனைவியைக் காப்பாற்றும் போது கணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மெசேஜ்க்கு ரிப்ளை செய்யாமல் என்ன வேலை? - ட்ரோன் அனுப்பி ஜன்னல் வழியே கண்காணித்த தோழி !