Tamilnadu

கொடநாடு வழக்கு; காவலாளியை தலைகீழாக கட்டி வைத்த மரத்தை வெட்டி அகற்றி எஸ்டேட் நிர்வாகம்: CBCID பகீர் தகவல்!

கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர்.

முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு சோலூர் மட்டம் போலிஸார் தொடக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போதைய நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்த முரளி ரம்பா தலைமையில் சோலூர் மட்டம் போலிசார் முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் 2020- ஆம் ஆண்டு தமிழக காவல்துறை நீலகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனி படை போலிஸ் விசாரணைக்கு மாற்றியது. அதன் பின்னர் தனிப்படை போலிஸார் கடந்த ஓராண்டாக ஜெயலலிதாவின் தோழியும் கொடநாடு எஸ்டேட் ஒரு பங்குதாரருமான சசிகலா, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் உட்பட 316 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற்றி தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டதால் தனிபடை போலிசாரிடமிருந்து வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவினர் பெற்று கொண்டனர்.

அதனையடுத்து சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி முகமது ஷகில் அக்தர் தாலைமையிலான 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களா மற்றும் கொலை நடந்த இடங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின் போது, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இரவு காவலாளி ஓம் பகதூரை தலை கீழாக கட்டி வைத்த மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றி இருப்பதும் கதற்கு பதிலாக மரக்கன்றை அதே இடத்தில் நட்டு வளர்த்து வருவதும் தனிபடை விசாரணையில் கண்டறியபட்டுள்ளது.

பங்களாவின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த லாரியில் இரவு காவலில் இருந்த கிருஷ்ண தாபாவை தாக்கி லாரியில் கட்டி வைத்த அவர்கள் பின்னர் 10-நம்பர் கேட்டில் இருந்த ஓம் பகதூரை அங்கிருந்த மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து கடுமையாக தாக்கி கொலை செய்தனர்.

தொடக்கத்தில் கோத்தகிரி போலிசார் விசாரித்த அந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிபடை போலிசார் விசாரித்து வந்தனர்.

அந்த விசாரணையில் ஓம்பகதூர் தலைகீழாக கட்டிவைத்து கொலை செய்யபட்ட மரம் வெட்டி அகற்றி இருப்பதும் அதற்கு பதிலாக புதிதாக மரக்கன்று ஒன்றை நட்டு வளர்த்து வருவதும் தெரிய வந்துள்ளது.

தற்போது அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றபட்டுள்ள நிலையில் மரம் வெட்டி அகற்றபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. வழக்கு விசாரணை நிறைவடையாத நிலையில் மரத்தை வெட்டி அகற்றியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Also Read: கொடநாடு வழக்கு - CBCID போலிசார் ஆஜராகி அடுத்த கட்ட விசாரணை குறித்து தகவல் - கலக்கத்தில் எடப்பாடி கும்பல்!